

சென்னை,
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை. பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மலைக்கொழுந்தன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு ஆசிரியர்கள் பயிற்சி ' மற்றும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியானது பள்ளி நேரத்திற்கு அப்பாலும், விடுமுறை நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், உடல், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் கல்விப் பணியையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேற்கொண்டு வருவதால், அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் உரிய நலச்சலுகைகள் வழங்கப்படுவது அவசியமாகும். எனவே 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.