தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதம் கடந்தும் சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

போட்டித் தேர்வில் மட்டுமல்லாது நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற பழனிசாமி அரசில் கொண்டுவரப்பட்ட நடைமுறையையே பின்பற்றி தேர்வை நடத்தியதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளைக்கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வோ, அதன் மூலம் பணி நியமன ஆணையோ வழங்கப்படாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் நிலவும் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசும் அதன் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது அரசுப்பணியை எதிர்பாத்து காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்காயிரம் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்குவதோடு, அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com