கத்திமுனையில் ஆன்லைன் உணவு வினியோக ஊழியரிடம் பீட்சா, பர்கர் பறித்த வாலிபர் கைது

வியாசர்பாடியில் கத்திமுனையில் ஆன்லைன் உணவு வினியோக ஊழியரிடம் பீட்சா, பர்கர் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கத்திமுனையில் ஆன்லைன் உணவு வினியோக ஊழியரிடம் பீட்சா, பர்கர் பறித்த வாலிபர் கைது
Published on

சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவண குமார் (வயது 20). இவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் ஆடரின் பேரில் வீட்டிற்கு சப்ளை செய்ய வைத்திருந்த பீசா, பர்கர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்து சரவணகுமார் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில் நடத்திய விசாரணையில், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கரண் (வயது 25) என்பவர் வழிப்பறி செய்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் இதே போல் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வியாசர்பாடி போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com