பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 3 மாணவர்கள் படுகாயம்

சாத்தான்குளம் சாலையில் வேலை நிமித்தமாக வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 3 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சென்ற ஒரு பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 3 மாணவர்கள் படுகாயம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் பிரகாசபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அந்தோணிபீட்டர் (வயது 23), சவுண்டு சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். சாத்தான்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆண்ரோஸ்பிரபு மகன் நார்மன் ஜோசுவா(18), பேய்குளம் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் சுடலை சூர்யா(19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரிபாய்தீன் மகன் பெரோஸ்கான்(19). இவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அந்தோணிபீட்டர் நேற்று முன்தினம் மாலையில் வேலை நிமித்தமாக சாத்தான்குளம் சாலையில் டி.கே.சி. நகர் அருகே தனது மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அச்சம்பாடு ஊருக்கு வளைவில் திரும்பும்போது அவரது பின்னால் நார்மன்ஜோசுவா, சுடலைசூர்யா, பெரோஸ்கான் ஆகியோர் ஒரே மோட்டார் பைக்கில் சென்றனர். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் பைக்குகளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்தோணிபீட்டர் பரிதாபமாக இறந்தார். இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளயங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com