பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபரிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை 11 மணிக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சூர்யாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால், தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக சூர்யா தெரிவித்ததால், முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்திய நிலையில், தற்போது தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com