பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்தது.
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
Published on

திருநெல்வேலி,

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முதற்கட்ட விசாரணையையும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணையும் நடத்தினார்கள். தொடர்ந்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த வேதநாராயணன் (வயது 48) என்பவர் அளித்த புகாரின்பேரிலும் சி.பி.சி.ஐ.டி. மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தது. அதில் உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங், விக்கிரமசிங்கபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், விக்கிரமசிங்கபுரம் போலீஸ்காரர்கள் விக்னேஷ், மணி என்ற மணிகண்டன் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் உதவி சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் தவிர மற்ற 2 போலீஸ்காரர்களும் வழக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரிடம் நாளை (திங்கட்கிழமை) சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது அரசு பல் டாக்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com