திருமங்கலம் அருகே கோவில் திருவிழா - 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் ஆண்களுக்கு கறி விருந்து

திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவையொட்டி 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது.
திருமங்கலம் அருகே கோவில் திருவிழா - 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் ஆண்களுக்கு கறி விருந்து
Published on

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவையொட்டி 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது.

கரும்பாறை முத்தையா கோவில்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் செல்லும்போது முத்தையா சுவாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை யாரும் விரட்டமாட்டார்கள்.

கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா நேற்று முன்தினம் காலை தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதையடுத்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டன. பின்னர் 2500 கிலோ அரிசியுடன், அசைவ உணவு கமகமவென சமைக்கப்பட்டது.

10 ஆயிரம் ஆண்களுக்கு கறிவிருந்து

அதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. வாழை இலையில் சாதமும், ஆட்டுகறி குழம்பும் பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் பக்தர்கள் அப்படியே விட்டுச்செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு, இலைகள் காய்ந்த பின்னரே பெண்கள் இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், கருமாத்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுவதாகவும், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடனாக ஆடுகளை கோவிலுக்கு வழங்குவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com