

சென்னை,
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை பாரிமுனையில் தூய்மைப்பணியாளர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த தி.மு.க. ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது
தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னரும், இந்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் தங்களின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டு திடீர் பேரணியாக சென்றனர். "முதல்-அமைச்சர் விஜய் எங்களை நேரடியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்" என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியாக முன்னேற முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள், காவல்துறையை கண்டித்து அங்கேயே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். பணி நிரந்தரம் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.