

சென்னை,
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் உரிய ஒப்பந்த புள்ளி நடைமுறைகள் மற்றும் துறைசார் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொறியாளர்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒப்பந்த புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி டெண்டர் கோரப்பட வேண்டு என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு பணியை தொடங்குவதற்கு முன்பாகவும் நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப அனுமதி, போதுமான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்தேதியிட்டு அனுமதி, பணி முடிந்த பின்னர் ஒப்பந்த புள்ளி கோருவது உள்ளிட்ட விவகாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் ஒப்பந்த புள்ளி விவகாரம் தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக பொதுப்பணித்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.