

தென்காசி,
தென்காசி அருகே அரசுப் பள்ளியில் 10 மாணவிகளை பிரம்பால் கடுமையாக தாக்கியதாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 10-ஆம் வகுப்பு பயிலும் 10 மாணவிகளை பிரம்பால் தாக்கியதில் அவர்களுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு தேர்வெழுத முடியாத நிலை உருவானதாகக் கூறப்படும் நிலையில், 44 வயதுடைய அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்றது. போலீசாரின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்ட தேன்மரியா சுகந்தி என்ற ஆசிரியை 11-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த 10-ஆம் வகுப்பு அறையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஆத்திரமடைந்தார்.
பின்னர் அவர் அந்த வகுப்பறைக்குள் சென்று மாணவிகளை பிரம்பால் கடுமையாகத் தாக்கினார். சுமார் 10 மாணவிகளின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. காயமடைந்த மாணவிகளுக்கு வி.கே.புதூர் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பவித்ரா என்ற மாணவி தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்று நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைகளில் தொடர்ந்து வீக்கம் இருந்ததால், காயமடைந்த மாணவிகளால் பள்ளிக்குச் செல்லவோ, தேர்வெழுதவோ முடியவில்லை. இதை தொடர்ந்து, பவித்ராவின் தாயார் ராஜாத்தி மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 115(2)-ன் கீழும், சிறார் நீதிச் சட்டத்தின் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வீரகேரளம்புதூர் போலீசார்ர் அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.