முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த மோதலால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. அப்போது புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதல் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டினர். கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்டு மோதல் உருவாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவித்தவர் அ.தி.மு.க. உறுப்பினரே இல்லை என்றும், வேண்டுமென்றே பிரச்சினை செய்யும் நோக்கில் கூட்டத்துக்கு அவர் வந்துள்ளார் என்றும் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.






