

தொண்டி
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துவரம் பருப்பில் வண்டுகள் இருந்ததாக புகார் எழுந்தது. குடிமை பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரேஷன் கடையை சோதனை செய்தனர். அப்போது ஒரு மூடையில் இருந்த 23 கிலோ துவரம் பருப்பில் வண்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த துவரம் பருப்பை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே வண்டுகள் இருந்த துவரம் பருப்பை வாங்கி சென்ற பொதுமக்களுக்கு அதற்கு பதிலாக வேறு துவரம் பருப்பை அதிகாரிகள் வழங்கினர். மேலும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் கூட்டுறவு சார் பதிவாளர் சவுந்திர பாண்டியன், எஸ்.பி.பட்டினம் 1-ம் நம்பர் ரேஷன் கடையின் விற்பனையாளரான பாண்டியம்மாள் தேவியை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.