

கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 40 பேர் ஒரு தனியார் பஸ்சில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். இந்த பஸ்சை வந்தவாசியைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தில் உள்ள சாலை வளைவில் மாலை 5.30 மணியளவில் பஸ் வந்த போது, சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று சுமார் 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ்சை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு பஸ்களும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாயின.
5 பேர் பலி
இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. விபத்தில் அரசு பஸ் பலத்த சேதமடைந்ததில், பஸ்சின் டிரைவர் அய்யப்பன் காயமடைந்தார். தனியார் பஸ்சில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில், 3 பெண்கள் உட்பட4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், விபத்தை கண்டதும் தனியார் பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இந்த.விபத்து குறித்து தகவலறிந்த கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த வேட்டவராயன் (வயது 60), அன்னபூரணி (55), அலமேலு (52) மற்றும் முனியம்மாள் (60) ஆகியோர் பலியானது தெரியவந்தது.
மேலும் இந்த விபத்தில் சக்கரபாணி, சீனிவாசன், ஏழுமலை, வலசை, சிவகாமி, பொன்னுரங்கம், உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அரசு பஸ் டிரைவர் அய்யப்பன் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.