தூத்துக்குடி அருகே பயங்கரம்: டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் ஒரு விவசாயி தலையில் டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
விவசாயி படுகொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நள்ளிரவில் விவசாயி ஒருவர் டைல்ஸ் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 47). இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஞானப்பிரகாசம் தற்போது புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி மெயின் ரோட்டில் உள்ள டெய்லர் கடை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, தனது குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வந்தார்.

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை

நேற்று நள்ளிரவில் ஞானப்பிரகாசத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த நபரிடம் சத்தம்போட்டு பேசியவாறே வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் ஞானப்பிரகாசம் தலையில் டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவல் அறிந்து தூத்துக்கடி எஸ்.பி. சிவபிரசாத், ரூரல் டி.எஸ்.பி. சுதீர், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமாரவேல்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஞானப்பிரகாசத்தின் செல்போனில் பேசிய நபர் யார்? முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com