சென்னையில் பயங்கரவாதி கைது விமான நிலையத்தில் சிக்கினார்

நாடு முழுவதும் ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பயங்கரவாதி கைது விமான நிலையத்தில் சிக்கினார்
Published on

பெரம்பூர், 

கடந்த 2020-ம் ஆண்டு சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தவ்பீக் (வயது 47) என்பவர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் அக்பர் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ.புலனாய்வு அமைப்பு அதிகாரி போல் நடித்து ரூ.3 கோடி பணத்தை பறித்துக்கொண்டு தவ்பீக் தப்பிவிட்டார். இந்த வழக்கில் பயங்கரவாதி தவ்பீக்கின் மனைவி சல்மா உட்பட 6 பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தவ்பீக்கை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தவ்பீக் பல ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வந்தார்.

இதனால் சென்னை போலீசார் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பயங்கரவாதி தவ்பீக்கை தேடி வந்தனர். இதையடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு பயங்கரவாதி தவ்பீக் வந்த போது விமான நிலைய அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் தவ்பீக்கை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், மகேந்திர குமார் மற்றும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், தொழிலதிபர் கடத்தலுக்கு பின்னர் ரூ.3 கோடி பணத்துடன் அவர் வங்காளதேசத்துக்கு சென்று தலைமறைவானது தெரியவந்துள்ளது. அங்கு உல்லாசமாக வாழ்ந்து வந்த பயங்கரவாதி தவ்பீக் போலி பாஸ்போர்ட் மூலமாக இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முத்தியால்பேட்டை தொழிலதிபர் கடத்தல் சம்பவத்திற்கு பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்த போது, பயங்கரவாதி தவ்பீக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் போலீசார் விசாரணையில், தவ்பீக் மீது 2002-ம் ஆண்டு மும்பை மற்றும் கேரளாவில் கொலை மற்றும் குண்டு வைத்தது தொடர்பான வழக்குகள் உள்பட 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி பயங்கரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டதால் தேசிய புலனாய்வு முகமை அமைப்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பயங்கரவாத அமைப்பிற்கு உதவியதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னைக்கு வந்த பயங்கரவாதி தவ்பீக் பயங்கரவாத செயலில் ஈடுபடும் திட்டத்துடன் வந்தாரா? என்பதை கண்டறிய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com