

கோவை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதும், தாய்மாமன் சீராக குழந்தைகளுக்கு தங்கம் வழங்கும் பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையிலும் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 22 கேரட் 916 தரத்துடன் கூடிய 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அரசு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய் துள்ளது. டெண்டரும் 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. கோவை மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 1,200 குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.
வருகிற 15-ந் தேதி திட்டம் தொடங்கும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். முதற்கட்டமாக வருகிற 14-ந் தேதி தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு, திட்டம் தொடங்கிய பிறகு அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.