

சென்னை,
அ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகியான தங்கதமிழ்செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.வில் இணைய சொல்லி யாரும் என்னை அணுகவில்லை. தி.மு.க. உள்பட எந்த கட்சியிலும் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை. நீக்கினாலும் கவலையில்லை. எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை. அச்சுறுத்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்றார்.
இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது. நான் யார் ? நீ யார்? என்ற தலைப்பில் நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை முடக்க பாஜகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் திட்டமிட்டுள்ளதாகவும், அமித்ஷா வியூகம் வகுத்து அவர் கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.