

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மேற்காசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கப்பல்கள் பயணிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு பல மடங்கு உயர்ந்து விட்ட போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இது பெரும் பயனைத் தந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால், ஹார்மோஸ் நீரிணை வழியாக இந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள் வரத் துவங்கியுள்ளன. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது. ஆனாலும், கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்படட்டுள்ளன. இந்த சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரியில் பத்து ரூபாய் குறைத்துள்ளது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் வரி 10 ரூபாயை நீக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு இந்த நடவடிக்கையால், இனி பெட்ரோலுக்கான கலால் வரி, மூன்று ரூபாயாக மட்டுமே இருக்கும். டீசலுக்கு கலால் வரி இருக்காது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுமையை, மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பிலும் தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அரசின் மக்கள் நலம் சார்ந்த இந்த அறிவிப்பை பின்பற்றி மாநில அரசுகளும் தங்களது வரிகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.