

சென்னை,
மாவட்ட கழக நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மாநில பொறுப்பு கேட்டு தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் தவெக அலுவலகத்தின் முன்பு தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.