நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த குடும்பத்தினர், உடனடியாக கீழே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர்.
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Published on

சென்னை,

சென்னை நெற்குன்றம் பால்வாடி விரிவு பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 26). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னை நோக்கி காரில் தனது குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார்.

கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே வரும்போது, திடீரென காரின் எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து, காரை ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார்.

உடனடியாக காரில் இருந்த அவரது குடும்பத்தினர் கீழ இறங்கிவிட்டனர். இதற்கிடையில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தீயை அணைத்தனர்

இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளும், சென்னை நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் கரும்புகை வந்தவுடன் காரில் இருந்த இசக்கிமுத்து மற்றும் குடும்பத்தினர் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com