

சென்னை,
முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. சட்டப் பிரிவு மாநில இணை செயலாளருமான பாபு முருகவேல், நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு ஒன்றை அனுப்பிவைத்தார். அந்த புகார் மனுவில், சுதந்திர தினத்தன்று தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அப்போது தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்காமல் அவமதித்துவிட்டார். இது தொடர்பாக, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.