சேலத்தில் பரபரப்பு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

சேலத்தில் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் பரபரப்பு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின
Published on

சேலம், 

சார்பதிவாளர் அலுவலகம்

சேலம் சூரமங்கலத்தில் மேற்கு சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் காவேரி (வயது 58). இவரது வீடு சேலம் இரும்பாலை அருகே கணபதி பாளையத்தில் உள்ளது. நேற்று அதிகாலையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக காவேரி வீட்டிற்குள் புகுந்தனர்.

பின்னர் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டனர். அப்போது வீட்டில் காவேரி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் யாரையும் வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் வீட்டில் உள்ள பீரோக்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து மேஜை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாதனை நடத்தப்பட்டது. நேற்று காலையில் தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து சென்றனர்.

முக்கிய ஆவணங்கள்

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்ட போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் காவேரி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் ஊழியர்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com