குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாத நிலையில் கைதானவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு

புகார் கொடுத்த பெண்ணால் அடையாளம் காட்ட முடியாததால், நகைப்பறிப்பு வழக்கு குற்றவாளிகளை சிறையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறி அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாத நிலையில் கைதானவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மே 26-ந்தேதி சாலையில் நடந்த சென்ற பெண்ணின் நகையை மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பறித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், துரை என்ற வடிவேலு ஆகியோரை கடந்த ஆண்டு மே 31-ந்தேதி கைது செய்தனர்.

இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில், இவர்கள் மீண்டும் ஜாமீன் மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் எஸ்.சண்முகவேலாயுதம் ஆஜராகி, மனுதாரர்கள் மீதான வழக்கு கீழ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. முதல் சாட்சியான புகார் கொடுத்த பெண்மணி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, தன்னிடம் நகை பறித்த குற்றவாளியை யார் என்று அடையாளம் காட்ட முடியவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.

எனவே, மனுதாரர்கள் மீதான வழக்கே நீர்த்துபோய் விட்டது. அதனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று வாதிட்டார். இவரது வாதத்தை அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாவதியும் ஒப்புக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளில், குற்றவாளிகளை அடையாளம் காண குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 54(ஏ)வின் படி அடையாள அணிவகுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை இந்த வழக்கில் நினைவு கூறவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. ஒருவேளை அடையாள அணிவகுப்பு நடத்தியிருந்தால், குற்றவாளிகளை அந்த பெண் எளிதாக அடையாளம் காட்டியிருப்பார். தற்போது அந்த பெண்ணால், குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியவில்லை. இதை விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியாகவும் அவர் கூறி விட்டார்.

எனவே, வழக்கே நீர்த்து போய்விட்டது என்று மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொள்கிறேன். மனுதாரர்களை சிறையில் வைத்திருப்பதால் எந்த பயனும் ஏற்படாது. ஏற்கனவே அவர்கள் 264 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளனர். அதனால், நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்குகிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com