பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர் குழுவை மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர் குழுவை மாற்ற தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர் குழுவை மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்பில் தற்போது மாணவர்கள் சேர, தேசிய அளவில் நடைபெறும் நீட் என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையானது இல்லை. அதனால், தமிழக பாடத்திட்டத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக உருவாக்க, பல நிபுணர்களை கொண்ட 2 குழுவை தமிழக அரசு உருவாக்கியது. இதேபோல் நிபுணர் குழு 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. பலவிதமான இடையூறுகளால், அந்த குழு பாடத்திட்டத்தை வகுக்கவே இல்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த 2 குழுவுக்கும், அதேபோல் இடையூறு வரக்கூடாது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர்களை மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கும், புதிய பாடத்திட்டத்தை உருவாக்க 2 குழுவுக்கு கால நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக, தமிழக பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக 10 நிபுணர்களை கொண்ட ஒரு குழுவும், 13 நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழுவும் தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்காக ஜூன் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

சர்வதேச தரத்துக்கு பாடத்திட்டத்தை உருவாக்கி, இந்த 2 குழுவும் தமிழக அரசுக்கு விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே, பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை தமிழக அரசு மாற்ற தடைவிதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று, பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக இதுவரை 2 குழுவும் எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com