

சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 4 நாட்களாக நடந்தது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். அவர்களுக்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு 2009-2010-ம் நிதியாண்டில் 18.53 சதவீத நிலுவை கடனை விட்டுச்சென்றது. 2010-2011-ல் வருவாய் பற்றாக்குறை 0.47 சதவீதமாகவும், நிதிப்பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவீதமாகவும் மிகவும் உயர்வாக இருந்தது. 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபொழுது தி.மு.க. 2009-2010-ம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை 12,860.45 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், அது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3.23 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது 3 சதவிகிதத்திற்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், 3 சதவிதத்திற்கு மிகையாக தி.மு.க. ஆட்சியான 2009-2010, 2010-2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் இருந்திருக்கிறது.
அ.தி.மு.க. அரசு பற்றாக்குறையைக் குறைத்து 2011-2012, 2012-2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வருவாய் உபரி நிலையை ஏற்படுத்தி சாதனை புரிந்தது என்பதனை இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நிதிப்பற்றாக்குறையும் 1.87 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மொத்த நிலுவைக்கடன் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 15.36 விழுக்காடாக குறைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பொதுக்கடன் பெற்றுத்தான் மூலதனச் செலவினங்கள் உள்பட பிற செலவினங்களை மேற்கொள்கின்றன. உதாரணமாக, மத்திய அரசினுடைய 2020-2021-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், மொத்த நிலுவைக்கடன் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 48.70 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிலுவைக்கடனை, நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான 25 சதவீதத்திற்குள், அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. 2020-2021-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஓரளவிற்கு தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமைந்துள்ளன. மேலும், செலவினங்களை கட்டுப்படுத்தவும், வரவினைங்களைப் பெருக்குவதற்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது பற்றி நிதி நிலை அறிக்கையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இந்த அடிப்படையில் நிச்சயமாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதி நிலைமை நல்ல முன்னேற்றத்தை காணும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தி.மு.க. ஆட்சிக்காலமான 2006-2007-ம் ஆண்டு முதல் 2010-2011-ம் ஆண்டு வரை மொத்தம் கடனாக பெறப்பட்ட தொகை 43,892.29 கோடி ரூபாய் ஆக இருந்ததாகவும், 47,029.31 கோடி ரூபாய் மூலதனச்செலவிற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், 2011-2012-ம் ஆண்டு முதல் 2015-2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மொத்த கடனாக பெற்ற தொகை 1,09,716.52 கோடி ரூபாய் என்றும், மற்றும் மூலதன செலவினங்கள் மொத்தம் 97,126.06 கோடி ரூபாயாக இருந்தது என்றும் தி.மு.க. உறுப்பினர் குறிப்பிட்டார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,34,685.68 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, 85,331.35 கோடி ரூபாய் மட்டுமே மூலதனத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டது என்றும் ஒரு வாதத்தை முன்வைத்தார்.
அதாவது, மீதமுள்ள நிதி, தேவையற்ற செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் செலவுகளுக்காக ஒதுக்கப்படவில்லை என்பது போன்ற ஒரு கண்ணோட்டத்தில் அவ்வாறு பேசினார். ஆனால், அத்தகைய வாதம் முற்றிலும் தவறானதாகும். ஏனென்றால், தமிழக அரசால் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதிகள், வருவாய் கணக்கிலும் செலவிடப்படுகின்றன. குறிப்பாக, கல்வி, சுகாதாரம் விலையில்லாத ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம், மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் ஆகியவை அனைத்துமே வருவாய் கணக்கில்தான் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு, மாநில அரசுகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் என இருவகையான மானியங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் 2018-2019-ம் ஆண்டு வரையிலான அடிப்படை மானியம் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மாநிலங்களை பொறுத்தவரையில் மத்திய அரசால் 2017-2018-ம் ஆண்டு முதல் இம்மானியம் எந்த ஒரு மாநிலத்திற்கும் விடுவிக்கப்படவில்லை.
தமிழகத்தை பொறுத்தவரையில் 2019-2020-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமாக 4,345.57 கோடி ரூபாயும், செயல்திறன் மானியமாக 2017-2018-ம் ஆண்டு முதல் 2,029.22 கோடி ரூபாயும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலுவைகளை பெறுவதற்கு மாநில அரசு மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை செயல்படுத்தியதால், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டு தொகையான 1,967.10 கோடி ரூபாய் மட்டுமே தற்போது மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையும் இந்த நிதியாண்டின் முடிவுக்குள் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
2017-2018-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின்கீழ் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையாக 4,073 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும், சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில திட்டங்களை எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், சென்னை மாநகரத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் விரிவான வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.