பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்

திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் அவரது செல்போனை விட்டு சென்றதால் போலீசாரிடம் சிக்கினார்.
பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்
Published on

திருக்கோவிலூர்

மர்ம நபர்

திருக்கோவிலூரை அடுத்த வாணாபுரம் தாலுகா கடம்பூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கவல்லி(வயது 40). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் கதவை திறந்து வைத்துக்கொண்டு கணவர், மகன், மகள் ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் புகுந்து மாணிக்கவல்லியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் திடுக்கிட்டு கண்விழித்த அவர் திருடன்... திருடன்.. என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கைது

மர்ம நபர் தப்பி ஓடியபோது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. பின்னர் இந்த செல்போனை திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணிக்கவல்லி நடந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரின் செல்போன் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் மாணிக்கவல்லியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர் கடம்பூர் காலனியை சேர்ந்த சேகர் மகன் சிலம்பரசன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com