கண்ணகி சிலை எதிரே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

கண்ணகி சிலை எதிரே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கண்ணகி சிலை எதிரே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
Published on

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே நேற்று மாலை கார் ஒன்று சேப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை இதயதுல்லா என்பவர் ஓட்டி வந்தார்.

பெட்ரோலால் இயங்கும் இந்த காரின் முன்பக்கம் பேட்டரி இருக்கும் பகுதியில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வந்தது. ஒரு சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் இதயதுல்லா உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி ஓடினார். சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் கார் தீப்பற்றி எரிவதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடுபோல் ஆகிவிட்டது. துரிதமாக செயல்பட்டதால் டிரைவர் இதயதுல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இது தொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com