முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து

விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசிய வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
File image
File image
Published on

சென்னை,

2022-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com