இறந்ததாக கூறி உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்த தம்பி மீது வழக்கு

உயிருடன் உள்ள அண்ணனை இறந்து விட்டதாக கூறி, குளிர்பதன பெட்டியில் வைத்த தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்ததாக கூறி உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்த தம்பி மீது வழக்கு
Published on

சேலம்,

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதித்தது.

இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து பாலசுப்பிரமணிய குமாரை அவரது தம்பி சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அண்ணன் இறந்துவிட்டார் என்று கூறிக்கொண்டு உயிருடன் உள்ளவரை இறந்தவர்களின் உடலை வைக்க கூடிய குளிர் பதன பெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைத்துள்ளார். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் குளிர்பதன பெட்டியில் இருந்து முதியவரை மீட்க முயன்றனர். அப்போது சரவணன் அவர்களை தடுத்தார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மிகவும் அஜாக்கிரதையாக எந்திரத்தை கையாண்டதாகவும், முரட்டுத்தனமாக செயல்பட்டு உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்ததற்காகவும் 2 பிரிவுகளின் கீழ் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் சற்று மனநலம் பாதித்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com