கேரளா, ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

‘நீட்’ தேர்வு மையங்களை கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி சி.பி. எஸ்.இ. இயக்குனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கவில்லை.

அதற்கு பதில், கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர்.

ஆங்கிலம், தமிழ், மராட்டியம், தெலுங்கு என்று 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும். தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்துக்கு தேர்வு எழுதச் செல்லும்போது, அவர்களுக்கு தமிழ்வழி கேள்வித்தாள்கள் கிடைப்பது கேள்விக் குறியாகிவிடும்.

மாணவர்கள் மன அழுத்தத்துடன் தேர்வை எதிர்கொள்ள நேரிடும். எனவே, தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன் ஆஜராகி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும். மாணவர்கள் பலர் 17 வயது குழந்தைகள். அவர்களால் எப்படி நீண்ட தூரம் பயணம் செய்து, அதுவும் மொழி தெரியாத மாநிலங்களில் தேர்வு மையங்களை கண்டுபிடித்து தேர்வு எழுத முடியும்? என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம். அப்போது, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை சி.பி.எஸ்.இ. இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com