காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி தீர்த்தக்குடம் எடுக்க சென்றபோது பரிதாபம்

கரூர் அருகே கோவில் திருவிழாவிற்கு தீர்த்தக்குடம் எடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி தீர்த்தக்குடம் எடுக்க சென்றபோது பரிதாபம்
Published on

நொய்யல்,

கரூர் மாவட்டம், பரமத்தி அருகே காருடையாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவர திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக காருடையாம்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர். அவர்களுடன் காருடையாம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 20), புருஷோத்தமன் (17), பரமத்தி அருகே உள்ள புதுக்கநல்லி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் நவீன்குமார் (18) ஆகியோரும் சென்றனர்.

3 பேர் பலி

அப்போது அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு, தீர்த்தக்குடம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதில் பிரபாகரன், புருஷோத்தமன், நவீன்குமார் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்தபோது, ஆற்றில் மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளம் அருகே சென்றுவிட்டனர்.

நீச்சல் தெரியாததால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

2 பேர் உடல்கள் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு புருஷோத்தமன், நவீன்குமார் உடல்கள் மீட்கப்பட்டன. பிரபாகரனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

விசாரணையில், புருஷோத்தமன் புகளூர் காகித ஆலை ஐ.டி.ஐ.யில் படித்து வந்ததும், மற்ற 2 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com