சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஒரு கோப்பை டீ யின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் கடுமையான பதட்டம் நிலவி வருகிறது. சர்வ தேச நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட உறவு நெறிகளுக்கு எதிராக, ஈரான் மீது பிப்ரவரி 28, 2026 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் ஈரான் நாட்டின் உச்சமட்ட தலைவர் அயத்துல்லா கொமேனி உள்பட சில ராணுவ உயர் அதிகாரிகளும், பள்ளிக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஈரான் நாடு ஹார்முஸ் கடல் வழிப் பாதையை மூடிவிட்டது. இதனால் கடல் வழி போக்குவரத்து தடைபட்டு, எரிபொருள் தட்டுபாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்டு ,ஆயிரத்து 768 ரூபாய் 50 காசுக்கு விற்று வந்த வணிக சிலிண்டர், தற்போது 2 ஆயிரத்து 246 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஒரு கோப்பை டீ யின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணாமாகும்.

நாட்டின் விடுதலைப் போராட்டக் களத்தில் உருவான, அணிசேரா அயலுறவுக் கொள்கைக்கு துரோகமிழைத்து, மேலாதிக்க வெறி பிடித்து அலையும் அமெரிக்க அரசின் டிரம்ப் நிர்வாகத்தை மோடி அரசு ஆதரித்து வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் நிபந்தனையை ஏற்று மலிவான விலையில் இந்திய பணமதிப்பில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யாவிடம், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது மோடி அரசு.

கப்பல் படை பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இந்தியா வந்து சென்ற, ஈரான் ராணுவக் கப்பலை தாக்கி, அதில் பயணித்த அனைவரையும் கொன்றழித்த, அமெரிக்காவின் கொடூரச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காத்தது மோடி அரசு. இது போன்ற தவறான நடவடிக்கைகளால் தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் தொடர்த்து உயர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த விலை உயர்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்து, விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல், மத்திய அரசே ஏற்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com