அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்
Published on

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

பேட்டி

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திருவாவளவன் எம்.பி. கலந்துகொண்டார். பின்னர் திருவாரூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதில் பங்கேற்க உள்ளேன். இதுவரை ஜனாதிபதியாக கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

எனவே கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.

அக்னிபத் என்னும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர் தேர்வு செய்யப்படும் திட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பெரும்பான்மையாக பங்கேற்பது இந்து இளைஞர்கள் தான்.

கவிட வேண்டும்

எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. எனவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்துகிறோம். பெரம்பலூர் லாடபுரத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டிகிறோம்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் லாக்அப் மரணம் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

விசாரணை ஆணையம்

இதற்கு காரணமானவர்கள் மீது பணியிடை நீக்கம் மட்டும் போதாது. கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். போலீஸ் நிலைய விசாரணை போது, சிறையில் இருக்கும் போது மரணங்கள் நிகழுமானால் அதற்கு அதிகாரிகளே பொறுப்பு என்ற நிலையில் சட்டம் கொண்டு வர வேண்டும். லாக்அப் மரணம் குறித்து உண்மையை கண்டறிய நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

சாதி வன்கொடுமை, சிறுமி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு தனி உளவுத்துறை அமைக்க வேண்டும். ஒற்றை தலைமை என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். இதுகுறித்து அக்கட்சி தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் நாங்கள் கருத்து கூற முடியாது.

தமிழக அமைச்சர்கள் குறித்து ஊழல் குற்ற சாட்டுகளை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறிவருவது பரபரப்பு அரசியலுக்காக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். தீண்டாமை அதிகரிப்பதை தடுப்பதற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.

எதிர்க்கட்சி மக்கள் தான்

பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சிகள் இல்லை என நினைத்து பேசுகிறது. பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சி மக்கள் தான். உரிய நேரத்தில் பா.ஜனதாவிற்கு பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்கள் வடிவழகன், செல்வம், மண்டல செயலாளர் கிட்டு, செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com