காரைக்குடியில் 'வளர் தமிழ்' நூலகம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


தினத்தந்தி 21 Jan 2025 1:11 PM IST (Updated: 21 Jan 2025 4:50 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு செய்கிறார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் 12 கோடி ரூபாய் செலவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் செட்டிநாடு கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், கீழ் தளம், தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கம்பர் நூலக அறை, தொல்காப்பியர் அரங்கமும், முதல் தளத்தில் திருவள்ளுவர், இளங்கோவடிகள் நூலக அறைகளும் இணையதள வசதியுடன் கூடிய மின் நூலகம், சிறு கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை வைப்பதற்கான இடம் உள்ளது. மேலும், நூலகத்தில் மின்தூக்கி வசதியும், குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள நிர்வாக தொகுதியின் முகப்பில், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலையரங்கக் கருத்தரங்கக் கூடத்திற்கு "வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை முதல்-அமைச்சர் வெளியிட, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, முனைவர் கவிஞர் அண்ணாதாசன் எழுதிய "மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் வெளியிட, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி பெற்றுக் கொண்டார்.

1 More update

Next Story