

சென்னை,
நாம தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.