

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தபோது, நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அப்பாவு தேர்தல் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 1-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை. 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணும்போது எங்களை அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, இந்த 203 தபால் ஓட்டுகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளையும் மீண்டும் எண்ண வேண்டும். 4-ந்தேதி (இன்று) நடைபெறும் இந்த மறு ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட ஒரு பதிவாளரை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமிக்கவேண்டும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து தபால் ஓட்டுகள் மற்றும் 3 சுற்றுகள் பதிவான ஓட்டு எந்திரங்களை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஓட்டு எண்ணிக்கைக்கு உதவி செய்ய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகுந்த அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன்படி, தபால் ஓட்டுகள் மற்றும் மிண்ணனு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி, சுமார் 11.30 மணியளவில், நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி துவங்கியது. தபால் வாக்குகளும், 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளையும் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 26 பேர் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.