இறந்தவர் உடலை ஓடை வழியாக சுமந்து சென்ற கிராம மக்கள்

இறந்தவர் உடலை ஓடை வழியாக சுமந்து சென்ற கிராம மக்கள்

நெல்லை அருகே சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பால், இறந்தவர் உடலை ஓடை வழியாக கிராம மக்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
Published on

நெல்லை அருகே சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பால், இறந்தவர் உடலை ஓடை வழியாக கிராம மக்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

பாதை ஆக்கிரமிப்பு

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் யாரேனும் இறந்தால் அந்த வழியாக சுடுகாட்டுக்கு செல்ல முடியாமல் அதன் அருகே உள்ள ஓடை வழியாக சென்று வருகின்றனர். மழை காலங்களில் அந்த ஓடையில் தண்ணீர் செல்வதால் அந்த சமயங்களில் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உயிர் இழந்தார். ஆக்கிரமிப்பு தொடர்ந்து அகற்றப்படாததால் மாரியப்ப பாண்டியன் மற்றும் பொதுமக்கள், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமையில் வருவாய்த்துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாத்தை நடத்தினர். அப்போது விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர், இறந்தவர் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடை வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com