மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாளையுடன் 8ம் கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது, இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.

கொரோனா பரிசோதனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தமிழகத்தில்தான் அதிகம். கொரோனா தடுப்பு பணிகளை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.7312 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கவனமாகவும், பாதுகாப்பாகவும் பொதுமுடக்கத்தை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அக். 1ம் தேதி முதல் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என கடந்த 24ம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com