

சென்னை,
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் மே 17, 18 தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண், இலங்கை அரசால் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டது.
இலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்துணை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இடிக்கப்பட்ட நினைவுத்தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துவதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.