கோர்ட்டுகளின் தொடர் குட்டுகளால் கதிகலங்கிப் போய் கிடக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் ரத்த அழுத்தம் எகிறியிருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான திருவேங்கடம் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணித்துள்ள நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவே கூடாது என மாண்பமை சுப்ரீம் கோர்ட்டில் மல்லுக் கட்டியது திமுக அரசு. ஆனால், மாண்பமை சுப்ரீம் கோர்ட்டோ சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி காண்பித்து ஆளும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்துவிட்டது - சபாஷ்!
மேலும், எம்பெருமான் முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் நிறத்தை மாற்றுவதற்கு முரண்டு பிடித்தவர்களைக் கண்டிக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்தது இந்த மதம் பிடித்த திமுக அரசு. ஆனால், மாண்பமை மதுரை ஐகோர்ட்டோ “திருப்பரங்குன்ற மலை என்ற இயற்பெயரே இனி தொடரும், அங்கே ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிடக் கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி, குன்றம் முழுதும் குமரனுக்கே சொந்தம், என்பதை உறுதிப்படுத்திவிட்டது. பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் ரத்த அழுத்தம் எகிறியிருக்கும் - சபாஷ்!
அடுத்ததாக, நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த சிறுநீரகத் திருட்டுகள் குறித்து இதுவரை ஒரு எப்.ஐ.ஆர். (FIR)-ஐ கூடப் பதிவு செய்யாத ஆளும் அரசின் அலட்சியத்திற்கு குட்டு வைக்கும் வகையில், இவ்விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது மாண்பமை சென்னை ஐகோர்ட்டு, ஆனால், திமுக அரசோ எங்கள் ஆட்சியில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க நாங்களே தான் அதிகாரிகளை நியமிப்போம் என மண்டையைத் தேய்த்துக் கொண்டே மாண்பமை சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று அடம் பிடித்தது. ஆனால், மாண்பமை சுப்ரீம் கோர்ட்டோ “சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி ஆளும் அரசுக்கு பெரிய குட்டு வைத்து அனுப்பிவிட்டது - சபாஷ்!
இறுதியாக, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மதுரை ஐகோர்ட்டு கிளையின் வரம்பிற்கு கீழ் வரும் நிலையில், சென்னை ஐகோர்ட்டு ஏன் அதை விசாரித்தது?” என்ற கிடுக்கிப்பிடி கேள்வியால் தமிழக அரசை சுற்றி வளைத்துள்ளது மாண்பமை ஐகோர்ட்டு. கரூரில் நிகழ்ந்த துர்மரணங்களின் கறைகளைத் தங்கள் கரங்களிலிருந்து கழுவி விடுவதற்காக எதிர்தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசோ இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கிறது - சபாஷ்!
இவ்வாறு தொடர்ந்து சட்டத்தின் சவுக்கடிகளால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போய் கிடக்கும் கழகக் கண்மணிகளே இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளுங்கள்! “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதற்கு?” “சிபிஐ விசாரணையைக் கண்டு இத்தனை பதற்றமெதற்கு?” “தொட்டதெற்கெல்லாம் கோர்ட்டுகளை நாடி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?” போன்ற மக்களின் பல கேள்விக் கணைகள் இனி உங்களை விடாது துளைக்கப்போகின்றன!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






