ஒரு தேர்வை கூட நடத்த இயலாத நிலையில் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒரு தேர்வை கூட நடத்த இயலாத நிலையில் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எதிர்காலத்தில் தவறுவகள் வராமலிருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Published on

சென்னை,

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,

இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,

“தொழில்நுட்பக்கோளாறு” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,

குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த தவறுக்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள், 2026-ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் .”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com