13 மணல் குவாரிகளை தொடங்குவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது-டி.ஜெயக்குமார்

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
13 மணல் குவாரிகளை தொடங்குவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது-டி.ஜெயக்குமார்
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.

மேலும்,ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டுக் வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தந்தை பெரியார் பற்றி சீமான் இழிவாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மறைந்த தலைவரின் புகழுக்கு இழுக்கு விளைவிக்க முயற்சிப்பது பண்பாடற்ற செயல் என்றும், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது, மறைந்த தலைவர்கள் பற்றி இழிவாக பேசுவது தமிழக ஆட்சி நிர்வாகம் மீதான கண்ணோட்டத்தை திசை திருப்பும் செயலோ என்று என்ன தோன்றுவதாகவும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்து தொந்தரவு செய்த குற்றவாளிகள் யார் என்பதை முழுமையாக விசாரித்து கைது செய்வதோடு மட்டுமல்லாமல், விரைவான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பெண்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதன் மூலம், அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதாகவும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறித்து ஆய்வு செய்வது என்பது அடிப்படை உரிமையை பறிப்பதாகும்.இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தகவல்களை திருட காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com