

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்றைய தினம் கோயம்புத்தூரில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான அண்ணன் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநிலத் தலைவர், அண்ணன் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக முன்னாள் அமைச்சர், அண்ணன் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலும் நடைபெற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஐந்து ஆண்டுகளாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள், குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கிறது. வாரிசுகளுக்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்த கோபாலபுரக் குடும்ப ஆட்சி, அகற்றப்படவிருக்கிறது. ஊழல் மலிந்த மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி அகன்று, தமிழகத்தில் நல்லாட்சி மலரவிருக்கிறது.
பொதுமக்களின் பெரும் எழுச்சி மிகுந்த உற்சாக வரவேற்பு, தமிழகத்தில் வரவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கான சாட்சி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.