

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தது. போரூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஆசாமி ஒருவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். கண்டக்டருக்கு ஆதரவாக பேசிய பயணிகளிடமும் போதை ஆசாமி தகராறு செய்தார். இதனால் பஸ்சை நிறுத்திய டிரைவர், குடிபோதை ஆசாமியை கீழே இறக்கி விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி மீண்டும் வாக்குவாதம் செய்தார். இதனால் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த சில பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட குடிபோதை ஆசாமியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.