கோவில் மண்டபத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்

கோவில் மண்டபத்தில் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கோவில் மண்டபத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்
Published on

மீன்சுருட்டி:

தூக்கில் தொங்கினார்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வானதிரையன் குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் மாலை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை டிரைவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த திருஞானத்தின் மகன் வெங்கடேசன்(வயது 28) ஓட்டி வந்து நிறுத்தியிருந்தார்.

நேற்று காலை அப்பகுதியில் மண் அள்ளப்பட இருந்தது. இந்நிலையில் அய்யனார் கோவில் மண்டபத்தில் தூக்குப்போட்ட நிலையில் வெங்கடேசன் பிணமாக தொங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com