

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை ஒரு புகழ்பெற்ற காவல்துறை. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது.
இதை கண்டுபிடிக்க முடியாமல் போனது, சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவிய போது இதன் பின்னணியில் இருப்பது யார்? எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும்.
வன்முறையாளர்கள் பள்ளிக்கு உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகின்ற போது காவல்துறை பயந்து ஓடுகிறது. அந்த சூழல் தமிழகத்தில் ஏற்படக் கூடாது. காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்ற போது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது.
ஒரு குழந்தை இறந்திருக்கிறது அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இதன் உண்மைத்தன்மை என்ன என்று அரசும்,காவல்துறை தான் சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரையில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சருக்கு இரண்டு கடமைகள் இருக்கிறது. ஒன்று குழந்தை மரணத்தை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டாவது வன்முறையாளர்கள் கொள்ளையர்களை கண்டுபிடித்து வாழ்க்கையில் இனிமேல் அவர்கள் இதுபோன்று தவறுகள் செய்யாதவாறு அவர்களை தண்டிக்க வேண்டும். இந்த இரண்டையும் சமூகத்தினுடைய மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுவது தவறு. காரணம் தமிழக முதல்-அமைச்சர், தமிழக மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.