

சென்னை,
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சிஜேபி இயக்கத்தினர் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோருடன் சிஜேபி இயக்கத்தைச் சேர்ந்த சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிஜேபி இயக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தால் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், தற்போது தங்களது போராட்டம் முடிவுக்கு வந்ததால் அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டதோ, நீட் தேர்வும் நிச்சயமாக ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.