மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி

மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேரந்த 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (46 வயது). இவர் தனது வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்த காளான்களை பறித்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். அவர் மட்டுமல்லாது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி (45 வயது), அலமேலு (31 வயது), வெங்கடேஷ் (23 வயது), சரண்யா (14 வயது) ஆகியோரும் அந்த காளானை சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் காளானை சாப்பிட்ட சில மணி நேரத்தில் 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com