

சென்னை,
தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.
இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் முதல் பட்ஜெட், தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டை பார்க்கும்போது அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதைத் தவிர, புதிய சிந்தனையோ, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களோ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெயர் மாற்றம் மட்டுமே வளர்ச்சியாகாது என்பதை அரசு உணர வேண்டும்.
மேலும்,தேர்தல் காலத்தில் தவெக மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் முழக்கங்களாகவே இருந்தனவா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
பட்ஜெட் என்பது அரசின் பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல, மக்களின் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலிக்க வேண்டிய ஆவணமாகும். ஆனால் இந்த பட்ஜெட் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.