தமிழகத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் காலை 4 மணியோடு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று(செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியோடு நிறைவு பெற்றது.

இதையடுத்து அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. குறிப்பாக வெளிமாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின. மேலும் பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com